சீனாவில் ஃபுஜியான் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. ஃபுஜியான் மாகாணத்திலுள்ள புடியான் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 75 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், உடற்பயிற்சி நிலையங்கள், சினிமா மால்கள் மூடப்பட்டன. முக்கிய தேசிய சாலைகளும் ஃபுஜியானிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ஃபுஜியான்வாசிகள் சிலர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ஒருவர் 3 வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு 9 முறை சோதனை செய்யப்பட்ட போது நெகட்டிவ் என வந்த நிலையில், அதன்பின் அவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து புடியான் நகரில் உள்ள பள்ளியில் பயிலும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாணவனுடன் தொடர்பில் இருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 75 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து புதிதாக கொரோனா கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 1,293 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.