கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து, தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக ‘இந்து சமய அறநிலைத் துறை பணி  புதிய விதிகள் 2020’ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு விதிகள் உள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் கூடுதலாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்தனர். 
image
அதில், ‘எட்டு குடும்பங்களிலும் மூத்தவர்கள் இறந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண், அடுத்த பூசாரியாக  நியமிக்கப்படுவார். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றப்படுகிறது. மரபுக்கு மாறாக வயது வரம்பு நிர்ணயிப்பது சட்டவிரோதமானது. இந்து சமய அறநிலைய சட்டப்படி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரபுகளின் படி நியமனம் நடைபெற வேண்டும் என்பதால் இந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும்  நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.