கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ‘முன்னாள் எம்.எல்.ஏ-வும், தி.மு.க பிரமுகருமான கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் என்பவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருக்கிறார்.
Also Read: சைபர் மோசடிகள் மூலம் பணம் பறிப்பா? இனி நீங்கள் புகார் செய்ய வேண்டிய எண் இதுதான்!
பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். அவருடன் சேர்ந்து, கோவை தங்கம், அவருடைய மகள் ஆகியோரும் மிரட்டல் விடுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக, சிந்துஜா கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அருண் பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட மூன்று பேர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல்,
ஏமாற்றுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் கோவை தங்கம் தரப்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சிந்துஜா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர். என் மருமகனுடன் இணைந்து ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தார்.
சிந்துஜாவுக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லை. பணம் பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்ப் புகார் அளித்திருக்கிறார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.