ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி, விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது சிசிடிவி கேமரா காட்சிகளின் வாயிலாக உறுதியாகியுள்ளது.
தன்பாத் நகரில் நடை பயிற்சிக்காக சென்ற உத்தம் ஆனந்த்தின் உடல், சாலையோரம் கண்டறியப்பட்டது. அதிவேகமாக வந்த வாகனம் இடித்து அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் முதலில் கருதினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சாலையோரம் நடைபயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்துக்கு மிக நெருக்கமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், அவரை இடித்து விட்டு அதிவேகமாக அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன்மூலம் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது சிசிடிவி கேமரா காட்சிகளின் வாயிலாக உறுதியாகியுள்ளது.