சென்னையில் காற்றின் தரம் குறைந்துள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட 1.1 -3.8 மடங்கு காற்று மாசு அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உலகில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் குறைந்து, காற்று மாசு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் காற்றின் தரம், அதிக அளவு துகள்களுடன் மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஆலோசனைக் குழு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தும் சிலிக்கா, மாங்கனீசு, நிக்கல் ஆகியவை அதிகளவு இருப்பது தெரிய வந்துள்ளது. சுற்றுப்புறக் காற்றின் தர நிலையை ஆய்வு செய்யும் அமைப்பு, காற்றில் 20 மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தது. அதில், காற்றில் ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோ கிராம் அளவுக்கு மாசு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.
இது சராசரி அளவை விட 1.1 முதல் 3.8 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய பகுதிகளில் காற்று மாசு அதிக அளவு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல 20 மாதிரிகளில் 19 மாதிரிகளில் சிலிக்கா அளவு, கலிபோர்னிய சுற்றுச்சூழல் சுகாதார அபாய மதிப்பீட்டு அலுவலகம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாங்கனீசு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த, ஒரு கன மீட்டருக்கு 0.15 மைக்ரோ கிராமை விட அதிகமாக உள்ளதாகவும், நிக்கலின் அளவு ஒரு கன மீட்டருக்கு 0.0025 மைக்ரோ கிராமை விட அதிகமாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.