தங்களுடைய விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தி அட்டகாசம் செய்தவர்களை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவர் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருக்கு கிரிஸ்டோபர், ஜோசப் என இரு மகன்கள். இருவரும் பிலிப்பைன்ஸில் மருத்துவம் பயின்று வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வீட்டிற்கு வந்திருந்தனர்.
இருதயராஜிற்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலம் அண்ணாமலை நகரில் உள்ளது. அங்கு சிலபேர் மது அருந்திகொண்டும் தோட்டத்து வீட்டை அடித்து உடைத்துக் கொண்டிருப்பதாக இருதயராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே இருதயராஜ், கிறிஸ்டோபர், ஜோசப்பை அழைத்துக்கொண்டு குடித்துவிட்டு அங்கு அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளனர்.இதனால் அங்கு இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அராஜகத்தில் ஈடுப்பட்டவர்களை கிறிஸ்டோபர் மொபைலில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்ததும் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் தந்தை மகன்களை வெட்டியுள்ளனர்.
இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருதயராஜும் மற்றொரு ஜோசப்பும் படுகாயமடைந்து விழுந்தனர். கிறிஸ்டோபரின் மொபைலை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
அப்பகுதி மக்கள் படுகாயத்துடன் கிடந்த மூவரையும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி செந்தில்குமார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளார்.
“இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவரகளாக இருக்கலாம், தோட்டத்து பக்கம் சாதரணமாக குடிக்க வருபவர்கள் ஆயுதங்களுடன் இருக்க மாட்டார்கள், அவர்களின் டிரெஸ் கெட்டப் உள்ளூர் குற்றவாளிகள் போல் தெரியவில்லை, கிறிஸ்டோபர் வீடியோ எடுத்த மொபைலை எடுத்து சென்றதன் மூலம் தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதில் உஷாராக இருந்துள்ளனர்’ என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிவகங்கையை சேர்ந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.