அரியலூர் அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆடு, மாடுகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வந்த ஆறுஅடி நீள முதலை பிடிபட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தில் உள்ள சித்தேரியில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், ஒரு மாதகாலமாக முதலை ஒன்று இருந்து வருகிறது. இது, இரவு நேரத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இதையடுத்து முதலை இரவு நேரங்களில் வீதிகளில் அலைந்து வருவதை கண்ட பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் வனத்துறையினரை தொடர்பு கொண்டு கிராமப்புறங்களில் முதலை சுற்றி வருவதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு அங்கு வந்த வனத்துறையினர் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள சித்தேரி குளக்கரையில் முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முதலை கடைசிவரை கண்ணில் புலப்படாத நிலையில், வனத்துறையினர் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் முதலை கரையோரம் கிடப்பதாக அறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீனவர்கள் மூலம் வலையின் உதவி கொண்டு சுமார் 6 அடி நீளமுள்ள முதலையை பிடித்து டாட்டா ஏசி வாகனம் மூலம் கொள்ளிடம் ஆற்றில் விடுவித்தனர்.