புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா நிலவரம், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், கரும்பூஞ்சை நோய், தடுப்பூசி குறித்து படக்காட்சி மூலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கினார்.

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ”புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். சூழ்நிலையைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும்.

அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் பொதுநல மருத்துவர்களும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறதா என்பதைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் அவர்களை அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறது” என்று கூறினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.