கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளில் பலரும் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு விடுகின்றனர். சிலரே தீவிர பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும்கூட மீண்டும் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அது வயிற்றிலிருக்கும் கருவையும் பாதிக்கக்கூடும் என்பதால் கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுத்துகிறது.
Also Read: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி? மருத்துவர் கைடன்ஸ்!
விருப்பப்பட்டால் மட்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றிருந்த நிலைமாறி பாலூட்டும் தாய்மார்களையடுத்து, தற்போது கர்ப்பிணிகளும் கோவிட் தடுப்பூசி கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி கர்ப்பிணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உடன் வழங்கியிருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். கர்ப்பம் தரித்தல் கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்காது, கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் மற்ற நோயாளிகளைப் போலவே கர்ப்பிணிகளும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எல்லா மருந்துகளையும் போலவே கோவிட் தடுப்பூசியும் லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசியிட்ட பின் ஏறக்குறைய மூன்று நாள்கள் மற்றவர்களைப் போலவே கர்ப்பிணிகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். ஊசி போடும் இடத்தில் வலி, லேசான காய்ச்சல் ஏற்படலாம்.
மூச்சுத்திணறல், வயிற்று வலி, வாந்தியுடன் கூடிய தொடர் வயிற்றுவலி, கைகால்களில் வலி அல்லது மூட்டுகளில் வீக்கம், கடுமையான தொடர் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அரிதாக சில கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பெற்ற இருபது நாள்களுள் கடுமையான ஒவ்வாமை ஏற்படலாம். ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் நபர்களில் ஒருவருக்கே இப்படி நிகழும் என்றாலும் கூட பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் உடனடியாக அதை கவனிக்கவேண்டும்.
முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற உடல்நிலை பிரச்னைகளுள்ள கர்ப்பிணிகள் கொரோவானால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பகாலத்தில் கொரோனா பாதித்த 95 சதவிகித பெண்களுக்கு குழந்தை நல்லபடியாவாகவே பிறக்கும். சிலருக்கு அரிதாக, பிரசவ காலத்திற்கு முன்னதாகவே குழந்தை பிறக்கலாம். பிறப்பதற்கு முன்பே குழந்தை இறப்பது மிக அரிதான சூழலிலேயே நடக்கும்.
Also Read: Covid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா?
தங்களை மட்டுமல்லாது சுற்றி உள்ளவர்களையும் தொற்று பரவாமல் பாதுகாக்க இரட்டை மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை கர்ப்பிணிகள் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.