நூதன கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுக்க அந்த நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டேட் பேங்க்கின் ஏடிஎம் இயந்திரங்களின் சென்சாரை குழப்பி, வடமாநில கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது. வளசரவாக்கம், தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, கீழ்ப்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தொழில்நுட்ப ரீதியாக கைவரிசை காட்டியுள்ள இக்கொள்ளையர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் ஹரியானா தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்த இவர்கள், சென்னை முழுவதும் சுற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-இன் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால், அதில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் இயந்திரத்தில் பணம் வெளியே வந்தபின் சென்சாரில் கையை வைத்து மறைத்துவிட்டால், 20 நொடியில் அந்த பணம் அதே வங்கிக் கணக்கிற்கே திரும்பி விடுகிறது. அதனை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் பல்வேறு ஏடிஎம் மையங்களில் கைவரிசை காண்பித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.