ஆப்கானிஸ்தானின் ஜலாதாபாத் நகரில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நான்கு மருத்துவப் பணியாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர், தலிபான் பயங்கரவாதிகள். இதனை அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக கொன்று குவித்து வருகின்றனர் தலிபான் படையினர்.
மூன்று இடங்களில் நடைபெற்ற போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை நோக்கி தலிபான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் பெண்கள்.
மூன்று மாத இடைவெளிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அந்தப் பணி தற்போது கைவிடப்பட்டுள்ளது.