இந்தியா முழுவதும் மாநில வாரியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரத்தை சதவிகித அடிப்படையில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகுதி வாய்ந்த மக்கள்தொகையின் அடிப்படையின் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 16.16 சதவிகிதத்தினர் முதல் டோஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவில் 35.68 சதவிகிதத்தினரும், ஆந்திராவில் 25.16 சதவிகிதத்தினரும், தெலங்கானாவில் 26.10 சதவிகிதத்தினரும், கர்நாடகாவில் 30.83 சதவிகிதத்தினரும், புதுச்சேரியில் 27.82 சதவிகிதத்தினரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
Take a look at the detailed stats of the state-wise percentage of eligible population that received at least 1 dose of #COVIDVaccine.
For more real-time data, visit https://t.co/CKhgW33bvN or download the MyGov App. #IndiaFightsCorona #LargestVaccineDrive pic.twitter.com/WlZ2v2jpa0
— MyGovIndia (@mygovindia) June 15, 2021
நாட்டிலேயே அதிகபட்சமாக லடாக் பகுதியில் 89.51 சதவிகிதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 14.45 சதவிகிதத்தினரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கையிருப்பு எவ்வளவு?
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25.90 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, சுமார் 1.05 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பு: மத்திய அரசு இதுவரை, 26.69 கோடிக்கும் அதிகமான (26,69,14,930) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,67,21,069 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 47,43,580 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.
தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உத்தியின் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.