கொரோனா ஊரடங்கு காலத்திலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் செயல்பாடு மதுரையில் குறையவில்லை. வாகன சோதனையின்போது துப்பாக்கி மற்றும் 190 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் வந்த மூவரை காவல்துறையினர் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா மூட்டைகள்

ஊரடங்கில் மது விற்பனை குறைவால் கஞ்சா விற்பனை மதுரையில் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாநகர காவல்துறை அமைத்துள்ள தனிப்படையினர் அவனியாபுரம் பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் காமராஜர்புரத்தை சேர்ந்த பூமிநாதன், சோலை என்பதும், அவர்கள் சிறையில் இருக்கும் வெள்ளைக்காளி என்பவரின் உறவினர் என்பதும் தெரிந்தது.

கைப்பற்றிய துப்பாக்கி, தோட்டாக்கள், பணம்

இதில் பூமிநாதன், முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் மருமகன் பாண்டி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அதில் தலைமறைவானவர் என்பதும் தெரிய வந்தது.

அவர்களை சோதனை செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் பணமும், 5 தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோவை நிறுத்திய போது, அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட, ஆட்டோ ஓட்டி வந்த காளிமுத்துவை பிடித்து விசாரித்தனர். அந்த ஆட்டோவில் 60 கிலோ கஞ்ச பார்சல்கள் கைப்பற்றப்பட்டது.

தனிப்படையினரின் தொடர் விசாரணையில் தப்பி ஓடிய அருண்குமாரின் உறவினர் வீட்டில் 130 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் தப்பியோடிய அருண்குமார் உட்பட சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்

பழிக்குப்பழி கொலை வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்களை வெளியில் கொண்டு வர, அதற்கான வழக்கு செலவுக்காக கஞ்சா தொழிலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

190 கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்களையும், தோட்டாக்களுடன் துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.