கொரோனா ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் சென்னை பரங்கிமலை காவல் மாவட்டத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த உடற்பயிற்சி கூடத்தில் அனைவரையும் அனுமதிக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உடற்பயிற்சி கூடத்தின் முன்பக்கத்தின் வாசல் பூட்டப்பட்டு பின்பக்கம் வழியாகவே பயிற்சி வந்தவர்கள் வந்திருக்கின்றனர்.
அரசின் உத்தரவை மீறி ரகசியமாக செயல்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிடம் ஜிம் மாஸ்டர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆன்லைன் மூலம் பரங்கிமலை காவல் மாவட்ட உயரதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மாஸ்டரும் இளம்பெண்ணும் செல்போனில் பேசும் ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.
அந்த ஆடியோவில், ” ஹலோ மேடம், நான்தான் பேசுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் மாஸ்டர் பேசுவதாகத் தொடங்கும் ஆடியோவில் அந்த பெண் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்,மனஉளைச்சலில் இருக்கிறேன். உங்களுடைய விளக்கம் எனக்கு தேவையில்லை. நான் உங்களுடைய மனைவிக்கு மரியாதைக் கொடுத்துதான் நான் அமைதியாக வந்துவிட்டேன் என்பதாக அந்த ஆடியோ உள்ளது.
இதுகுறித்து பரங்கிமலை காவல் மாவட்ட போலீஸாரிடம் கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்திருந்தார். அதைப்பார்த்த மாஸ்டர் பிரேம் என்பவர், போனில் இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த ஆடியோதான் தற்போது வேகமாக பரவிவருகிறது. சம்பந்தப்பட்ட மாஸ்டரிடமும் இளம்பெண்ணிடம் விசாரித்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.