கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் வீட்டின் அருகே ஒரு அய்யா பதி அமைத்து அருள்வாக்கு சொல்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சங்கிலியில் கட்டிப் போட்டு, பிரம்பால் அடித்து பேய் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் `துரைராஜ் சாமியார்’ என அழைக்கின்றனர். இந்தநிலையில், அந்தப் பதியில் இளம்பெண் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவல் அறிந்த குளச்சல் டி.எஸ்.பி கணேசன், போலீஸாருடன் சென்று விசாரணை நடத்தியபோது, அங்கு ஓர் இளம்பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் இருப்பதைக் கண்டார். அது குறித்து உடனடியாக விசாரணையில் இறங்கினார் டி.எஸ்.பி. விசாரணையில், அந்தப் பெண் செம்பொன்விளை அருகேயுள்ள சேவிளைப் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி என்பது தெரியவந்தது.

சாமியார் எனக் கூறப்படும் துரைராஜ்

பட்டதாரிப் பெண்ணான அவருக்குக் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது கணவரும் பெற்றோரும் அவருக்குப் பேய் பிடித்திருக்கலாம் என எண்ணி, செம்பொன்விளை அய்யா பதியிலுள்ள துரைராஜ் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்தப் பெண்ணின் கை கால்களைக் கட்டிய சாமியார் துரைராஜ், வீட்டின் அருகிலுள்ள அய்யா கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சாமியார் துரைராஜ், அவர்களைக் குடும்பத்தோடு கோயிலில் தங்க வைத்து, அந்தப் பெண்ணைச் சங்கிலியில் கட்டிப்போட்டு, பேய் ஓட்டுவதாகக் கூறி, சாமி அருள் வந்ததுபோல் தினமும் பிரம்பால் அடித்து சித்திரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் கணவரான ராணுவ வீரருக்கு போலீஸார் அறிவுரை கூறி, படுகாயங்களுடன் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். `மனநலம் பாதித்தால் அதற்காக நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளன’ என்றும் `அன்பாக அரவணைத்தாலே மனநலன் காக்கப்படும்’ என்றும் அந்தப் பெண்ணின் கணவரிடம் போலீஸார் அறிவுரை கூறினர்.

போலீஸ் விசாரணை

மேலும், சாமியார் துரைராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கெனவே பலருக்குப் பேய் ஓட்டியதாகக் கூறியிருக்கிறார். மேலும், கோயிலுக்குப் பல பக்தர்கள் வந்து செல்வதாகவும் கூறியிருக்கிறார். இனி இது போன்று யாரையும் சங்கிலியால் கட்டிவைக்கவோ, பிரம்பால் அடிக்கவோ கூடாது என சாமியார் துரைராஜை போலீஸார் எச்சரித்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.