ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசி வரும் பப்ஜி மதன் என்கிற yotuber-க்கு எதிராக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது யு-டியூப் பக்கத்தை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் ‘மதன்’ எனும் யு-டியூப் சேனை நடத்தி வருபவர் மதன் என்கிற இளைஞர். ஆரம்பத்தில் இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த வரவேற்பு, ‘டாக்ஸிக் மதன் 18+’ என்கிற மற்றொரு யு-டியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. இந்த யு-டியூப் சேனல்களில் இவர் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கின்றன.
தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் மதன். அதிலும், பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. பெண்களை இழிவுபடுத்தும் கொடூர வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேசும் மதனுக்கு, பெண்கள் சிலர் தங்களை அவரது ஃபேன் என சொல்லி அவரோடு உரையாடுவது வேதனையளிப்பதாகவே இருக்கிறது.
மதனின் ஆபாச பேச்சுகளுக்கு சிலர் விளையாட்டின்போதே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் குறிப்பிடுவதோடு தன் வழக்கறிஞரும், பணமும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சமாளிக்க உதவும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி, சிலருக்கு அவர் விடும் கொலை மிரட்டல்கள் கேட்கும்போதே பகீர் என இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே மதனின் ஆபாச உரையாடல்கள் அடங்கிய வீடியோக்கள் பலரையும் அவரது யு-டியூப் சேனல் நோக்கி இழுத்து வந்திருக்கிறது. அந்தவகையில், ‘மதன்’ யு-டியூப் சேனலுக்கு 7 லட்சத்திற்கு அதிகமாகவும், ‘டாக்ஸிக் மதன் 18+’ யு-டியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 இலட்சம் Subcribers-ம் உள்ளனர். ஆபாச பேச்சு மட்டுமின்றி, ஆதரவற்றவர்களுக்கு உதவுதாகக் கூறி போட்டியாளர்களிடமிருந்து நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யு-டியூப் சேனல்களை முடக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.