சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கடந்த 11-ம் தேதி பள்ளிகரணை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் நோக்கி வந்த வெள்ளை நிற சொகுசு காரை போலீஸார் சோதனைச் செய்தனர். அப்போது காரை ஒட்டி வந்தவர், போலீஸாரிடம் என்னுடைய காரையே நிறுத்துகிறீர்களா, நான் யாரென்று உங்களுக்குத் தெரியாதா என்று பந்தாவாகக் கூறியிருக்கிறார். மேலும் காரின் முன்பக்க கண்ணாடியில் எம்.பி-யின் வாகன பாஸ் இருப்பதைக் கவனிக்கவில்லையா என போலீஸாரைப் பார்த்து சரமாரியாக கேள்விகளைக் கேட்டார். அதைக்கேட்டு வாகனச் சோதனையிலிருந்த போலீஸார் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். அப்போதுதான் காரின் முன்னால் எமெர்ஜென்ஸி ஆக்ஷன் நெட்வோர்க் (டெல்லி), செயலர் என்ற கொடி என்ற கொடியைப் பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே காரை ஓட்டி வந்த இளைஞரிடம் இது எந்த எம்.பியின் வாகன பாஸ் என போலீஸார் கேட்டனர்.
அதற்கு பந்தாவாக தென்சென்னை தி.மு.க எம்.பியின் பாஸ் எனக் கூறினார். உடனே நீங்கள் யாரென்று போலீஸார் கேட்டதற்கு நான் துணை கலெக்டர் என்று தெரிவித்தார். அதனால் போலீஸாருக்கு இளைஞர் மீதான சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் கூறுகையில், “வாகனச் சோதனையில் சிக்கியவரின் பெயர் ஷியாம் கண்ணா (27). சென்னை மடிப்பாக்கம் சதாசிவ நகரைச் சேர்ந்தவர்.
ஷியாம் சுந்தர், சுங்கச்சாவடியின் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிக்க எம்.பி-யின் வாகன பாஸை போலியாக தயாரித்து காரின் முன்பகுதியில் ஓட்டி வந்திருக்கிறார். மேலும் கொரோனா ஊரடங்கில் போலீஸாரின் வாகனச் சோதனையிலிருந்து தப்பிக்க துணை கலெக்டர் என்று கூறி வந்திருக்கிறார். அவரிடமிருந்து போலி எம்.பி வாகன பாஸ், சில அடையாள அட்டைகள், சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.
Also Read: சென்னை: லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடி – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!
இதையடுத்து ஷியாம் கண்ணா மீது 269, 170,171, 177,465,468 ஆகிய ஐபிசி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். ஷியாம் கண்ணாவுக்கு யார் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தது என்று விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப்பிறகுதான் ஷியாம் கண்ணாவின் சுயரூபம் தெரியவரும். இதற்கிடையில் அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றுவதாகத் கூறியிருக்கிறார். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.
ஒரே காரில் எமர்ஜென்ஸி ஆக்ஷன் நெட்வொர்க் கொடி, எம்.பி வாகன பாஸ் ஆகியவை இருந்ததோடு தன்னை துணைக் கலெக்டர் எனக்கூறியதால் ஷியாம் கண்ணா, போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.