மே மாதத்தில் கார் விற்பனையில் பெரும் சரிவு இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்தி உண்மைதான். ஆனால் முழு உண்மையில்லை. ஏனெனில் ஆரம்பகட்ட கார்கள், நடுத்தர கார்கள், சொகுசுகார்கள் என பல அனைத்து பிரிவுகளிலும் விற்பனை சரிவடைந்தது. ஆனால் அல்ட்ரா சொகுசுகார்களுக்கான சந்தையில் எந்த பாதிப்பும் இல்லை என விற்பனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் அதி சொகுசு கார்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஜிஎல்எஸ் மேபெக் (gls maybach) என்னும் பிராண்டினை அறிமுகம் செய்திருக்கிறது. ரூ.2.50 கோடி முதல் ரூ.4.3. கோடி வரையில் இந்த கார்களின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கு 50 கார்களை மட்டுமே விற்பனை இலக்காக பென்ஸ் நிர்ணயம் செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த கார்களின் விற்பனை முடிந்துவிட்டதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. அடுத்தாண்டு இந்த கார்களின் டெலிவரி கிடைக்கும் என பென்ஸ் அறிவித்திருக்கிறது.

image

அதிக பணம் வைத்திருந்தவர்கள் இதுவரை பெரிய செலவு செய்யாமல் இருந்திருக்க கூடும். ஷாப்பிங், டிராவலிங் என கடந்த இரு ஆண்டுகளாக பெரும் செலவு இல்லாததால் அந்த தொகையை இங்கு பயன்படுத்தி இருக்க கூடும் என மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி மார்டின் Schwenk தெரிவித்திருக்கிறார்.

பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதி சொகுசு கார்களுக்கு தேவை உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது கோவிட் பெருந்தொற்று காலத்தில் பணம் இருக்கும் நபர்கள் தங்கள் சௌகர்யங்களை உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். ‘இப்போது இல்லாவிட்டால் எப்போது’ என்னும் மனநிலைக்கு வந்துவிட்டதாக லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைவர் சர்த் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

image

3.5 கோடி ரூபாய்க்கு மேலான லம்போர்கினி கார்கள் இந்த ஆண்டு மட்டும் 50 வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

அதேபோல ஆடி நிறுவனமும் ஒரு கோடி ரூபாய்க்கு மேலான கார் விற்பனை சீராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கார்களை விட ஒரு கோடி ரூபாய்க்கு மேலான கார்களின் சீரான ஆர்டர்கள் இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு அதி சொகுசு கார்களின் விற்பனை சிறப்பாக இருந்தது. ரூ.2.5 கோடிக்கும் மேலான விலையுள்ள கார்கள் இந்தியாவில் 265 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, மனநிலை மாறுவது மற்றும் புதிய மாடல்கள் அறிமுகம் செய்வது ஆகிய காரணங்களால் 2019-ம் ஆண்டு விற்பனை இந்த ஆண்டும் இருக்கும் என சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.