இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்பு, தனிமைக்காலம் முடிந்து 2 நாள்களுக்கு முன்பு மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பொதுவாக சுற்றுப்பயணங்களில் உள்ளூர் அணிகளுடன் பயிற்சி போட்டிகள் நடக்கும். அப்போதுதான் வீரர்களால் மைதானத்தின் நிலை மற்றும் சீதோஷனங்களை அறிந்துக்கொள்ள முடியும். நியூசிலாந்து அணி ஏற்கெனவே இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் கொரோனா காரணமாக இந்திய அணிக்கு பயிற்சி போட்டி வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆனாலும் மனம் தளராத இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் இரு அணியாக பிரிந்து ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.