கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உருமாறிய கொரோனா ஏற்படும் என மத்திய மருத்துவ வல்லுநர் குழு
அறிக்கை அளித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தேவையில்லை என தகவல் பரவிய நிலையில் மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் மீண்டு மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இந்தியாவும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்திலிருந்து மீண்டெழுந்து வருகிறது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் என்று சொல்லப்படும் நிலையில் தடுப்பூசி குறித்து இன்னமும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவாரே உள்ளன.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா? எப்பொழுது அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான்? கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் 3 மாதங்கள் கழித்துதான் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அண்மை வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவடைவதுடன் தடுப்பூசியின் செயல்திறனும் மேம்படும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியானது. புதிய பரிந்துரைகளை இன்னும் மத்திய அரசு ஏற்கவில்லை எனவும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அதேபோன்று முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால் அவர்களும் குணமடைந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெளிவுப்படுத்தி இருக்கிறது.
அதே நேரம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உருமாறிய கொரோனா ஏற்படும் என சொல்லப்படுவதால் குழப்பம் நிலவுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது என கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் இதனால் தற்போதைய நிலையில் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது எனவும் மத்திய அரசு கூறுகிறது.