பீகாரில் 27 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர் 64-வது பீகார் பொது சேவை ஆணையத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி. ஆன இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

பீகார் காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 40 நபர்களில் ரசியா சுல்தான் என்ற 27 வயது பெண்ணும் ஒருவர். இவர், இதன்மூலம் பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவைச் சேர்ந்தவர் ரசியா சுல்தான். ஆனால் அவரின் தந்தை முகமது அஸ்லம் அன்சாரி போகாரோ எஃகு ஆலையில் ஸ்டெனோகிராஃபராக பணி செய்துவந்ததால், ஜார்கண்டில் உள்ள போகாரோவில் பள்ளி படிப்பை முடித்தார் ரசியா. இதற்கிடையே, 2016ல் அவரின் தந்தை காலமாக, அவரின் தாய் மட்டும் போகாரோவில் தங்கிவிட, பள்ளிப்படிப்பை முடித்ததும், ஜோத்பூருக்குச் சென்ற ரசியா, அங்கு பிடெக் முடித்தார்.

image

இதன்பின் மீண்டும் பீகார் திரும்பிய அவர் பீகாரின் அரசுப் பணியில் இணைந்தார். பீகார் அரசின் மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் தனது சிறுவயது கனவாக இருந்த பீகாரின் பொது சேவை ஆணையத் தேர்வுகளான பிபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்த அவர், தற்போது அதை வெற்றிகரமாக முடித்து பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக ரசியா சுல்தான் அளித்த பேட்டி ஒன்றில், “காவல்துறை அதிகாரியாக பணியாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்துவருகிறது. பெண்கள் தங்களுக்கு எதிரான எந்தவொரு குற்றச் சம்பவத்தையும் போலீசில் புகார் செய்ய முன்வருவதில்லை. இதனை களைய நான் முயற்சி செய்வேன்” என்றவர், இஸ்லாமிய சமூக குழந்தைகளின் கல்வி குறித்தும் பேசியிருக்கிறார்.

அதில், “இஸ்லாமிய சமூகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற அவர்களின் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்ல விரும்பும் சிறுமிகளுக்கு ஹிஜாப் அல்லது புர்கா ஒரு தடையாக இருக்காது. “புர்கா அல்லது ஹிஜாப் அணிவது ஒரு தடை அல்ல. நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியும் என்று நினைத்து பாருங்கள், எல்லா வகையான இடையூறுகளையும் சமாளிக்க தேவையான ஆற்றலை அல்லாஹ் தருவார்” என்றுள்ளார்.

டிஎஸ்பி ஆகவுள்ள மகிழ்ச்சியில் அவர் இருந்தாலும் சில தினங்கள் முன்னர்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார் ரசியா. தடுப்பூசி தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான புரிதல்களை அகற்றவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.