வங்கி மோசடி தொடர்பாக அவந்தா குழுமத்தை சார்ந்த கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. எஸ் வங்கியில் வாங்கிய கடனை நீட்டிக்க அந்த வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராணா கபூருக்கு லஞ்சம் கொடுத்தமைக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் தாபரின் Oyster Buildwell கட்டுமான நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடனை நீட்டிப்பதற்காக இந்த லஞ்சம் கைமாற்றப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. அவந்தா ரியல்டி மூலம் பங்களா ஒன்றை சந்தை விலையை காட்டிலும் பாதி விலை குறைவாக லஞ்சமாக ராணா கபூர் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கடனை நீட்டிப்பு செய்ததன் மூலம் சம்மந்தப்பட்ட எஸ் வங்கிக்கு 466.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக கவுதம் தாபர் தரப்பில் 307 கோடி ரூபாய் ராணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பொதுமக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது, மோசடி செய்தது ஆகிய புகார்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.