ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் படேல்.
கொரோனா இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகமான மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் தினமும் 9 ஆயிரம் பேருக்குமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கும், குறைவான மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கையும் நம் தமிழகத்தைப் போலவே அம்மாநில அரசும் அமல்படுத்தியுள்ளது.
இதனால், மனிதர்கள் நடமாட்டாம் இல்லாததால் சத்தீஸ்கர் மாநில சூரஜ்பூர் மாவட்டத்திலுள்ள குடர்கர் பகுதியில் வசிக்கும் குரங்குகள் உணவின்றி தவித்து வந்துள்ளன. இதனைக்கண்ட போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேஷ் படேல் தனது சொந்த செலவில் தினமும் 500 க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவும் பழங்களையும் வழங்கி பேருதவி செய்து வருகிறார். அவரின், இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து பேசிய ராஜேஷ் படேல், “குரங்குகள் இங்கு அருகிலுள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் உணவையே நம்பியுள்ளன. ஆனால், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவின்றி தவித்து வருவதைப் பார்த்தேன். அதிலிருந்து தினமும் உணவு பழங்களை வழங்கி வருகிறேன். இந்தக் குரங்குகளுக்கு வனத்துறை உணவளிக்கவேண்டும்” என்கிறார், அக்கறையுடன்.