சென்னையில் பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டிய பிரபல ரவுடி பினுவையும் அவரின் கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு பட்டா கத்தியால் கேக் வெட்டி, சர்ச்சையில் சிலர் சிக்கினர். ரவுடி பினு ஸ்டைலில் கேக்கை வெட்டி கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் கண்ணகி நகரைச் சேர்ந்த சுனிலும் அவரின் கூட்டாளிகளும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6.6.2021-ல் இரவு சில இளைஞர்கள் ஒன்று கூடி சுனில் என்பவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அப்போது கேக்கை பட்டா கத்தியால் சுனில் வெட்டியிருக்கிறார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலானது.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த யாகேஷ்வரன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் போலீஸார் பட்டா கத்தியால் கேக்கை வெட்டியவர்களைத் தேடி வந்தனர். விசாரணையில் கண்ணகிநகரைச் சேர்ந்த சுனில் (18), நவீன்குமார் என்கிற தொப்பை, அப்பு, தினேஷ், ராஜேஷ்,, கார்த்திக் என்கிற பீடி ஆகிய 6 பேர் எனத் தெரியவந்தது.

Also Read: திண்டுக்கல்: பட்டாகத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டம்!- போலீஸ் ரேடாரில் 6 பேர்
இதையடுத்து அவர்களை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது. ஆயுதங்களை வைத்திருத்தல், நோய் பரப்புதல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்திருக்கின்றனர்.பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.