நெல் கொள்முதலில் தலைவிரித்தாடும் லஞ்சம் லாவண்யம் குறித்து, சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர் ஒருவரை, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோபமாக பேசி, அவமானப்படுத்திய சம்பவம் டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விவசாயிகளின் முக்கிய பிரச்னையை அலட்சியப்படுத்தும் விதமாகவும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் கொள்முதல் நிலைய அலுவலர்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், விவசாயிகளிடமும், வேளாண்மைத்துறை அலுவலர்களிடமும் மிகவும் கண்ணிய குறைவாக நடந்துகொள்வதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். ஆனால் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எந்த ஒரு கோரிக்கை தொடர்பாகவும் வாய் திறக்கவே இல்லை.

குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கருணாந்தி ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தென்னை வணிக வளாகம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்தாண்டுகளாக முடக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திமுக தலைவர் ஸ்டாலின், அதனை நேரடியாக பார்வையிட்டு, உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனாலும் மூடியே கிடக்கிறது.

அதனை திறக்க தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி வீரசேனன் வலியுறுத்தினார். ஆனால் இக்கோரிக்கை குறித்து, அமைச்சர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. விவசாயிகள் சிலர் தங்களது முக்கிய பிரச்னைகளை இவரது கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தொலைபேசியில் தொடர்புக்கொண்டபோது மிகவும் கர்வமாக பேசியதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான் இன்று தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அப்போது செய்தியாளர் ஒருவர், “கடந்த ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்பட்டது. அது இப்போது ஒழிக்கப்படுமா என்ற ரீதியில் கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மிகவும் கன்ணியகுறைவாக, “நீ இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், நானும் கிறுக்குத்தனமாக தான் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்’’ என்றார். இது பத்திரிக்கையாளர்களையும் விவசாயிகளையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. பத்திரிக்கையாளர்களை மட்டும் அல்ல… விவசாயிகளையும் சேர்த்துதான் அவமானப்படுத்தியிருக்கிறார். நெல் கொள்முதல்ல நடக்கும் லஞ்ச ஊழலை பத்தி பேசினால் இவருக்கு ஏன் இப்படி கோபம் வருது. அதுவும் கடந்த ஆட்சியில் நடந்ததைப் பேசினதுக்கு இவர் ஏன் கோபப்படனும். அப்படினா, கடந்த ஆட்சியில் நெல் கொள்முதல்ல லஞ்சமே வாங்கலைனு அமைச்சர் சொல்ல வர்றாரா. இல்லை… நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்குறது தவறு இல்லைனு சொல்ல வர்றாரா. அமைச்சர் நடந்து கொண்ட விதம், மக்களாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. இந்த நாட்டோட எந்த ஒரு குடிமகனும் ஆட்சியாளர்களை கேள்விக் கேட்க உரிமை உண்டு. அதுவும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த உரிமை, காலம் காலமாக உறுதி செய்யப்பட்ட்டிருக்கு. அமைச்சர் தன்னோட கண்ணிய குறைவான செயலுக்கு, பொதுவெளியில் கண்டிப்பாக வருத்தம் தெரிவிச்சே ஆகணும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னோட அமைச்சரோட செயலுக்காக, தார்மீகமாக பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கணும். அமைச்சரின் இந்த செயலுக்கு உடனடியாக, இவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

அமைச்சர் பேசிய வீடியோவை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://www.facebook.com/PasumaiVikatan/videos/970813637016496/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.