சிஎஸ்கே அணியின் பெஸ்ட் பினிஷராக கேப்டன் தோனி எப்போதும் இருப்பார் என்று வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார் தீபக் சஹார். மேலும் சிஎஸ்கே அணியும் இந்தாண்டு மிகச் சிறப்பாக விளையாடி வந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய அணியும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
இது குறித்து பேசிய தீபக் சஹார் “15-20 வருடங்களாக ஒரு பேட்ஸ்மேன் ஒரே மாதிரி ஆட முடியாது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காதவரால் ஐபிஎல் தொடரில் எடுத்த உடனே அதிரடி காட்ட முடியாது. சிஎஸ்கே அணிக்காக பெஸ்ட் பினிஷராக தோனி இருந்து வருகிறார். இந்த சீசனிலும் இருப்பார் என நம்புகிறோம். 2018-19ஆம் ஆண்டுகளில் முதல் சில போட்டிகளில் தடுமாறிய தோனி, அதன்பிறகு அதிரடியாக விளையாடி தான் யார் என்பதை நிரூபித்தார்” என்றார்.
மேலும் பேசிய அவர் “நடப்பு தொடரிலும் அதேபோன்று அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. தற்போதுவரை முதல் 7 போட்டிகள்தான் நடந்து முடிந்துள்ளது. இதில் சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு நிச்சயம் கோப்பை வெல்வோம். நான் சிஎஸ்கேவுக்காக நான்கு வருடங்களாக விளையாடி வருகிறேன். தோனி என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் எனக்கு மட்டும் இன்ஸ்பிரேஷன் இல்லை, பல இளைஞர்களுக்கும்தான்” என்றார் தீபக் சஹார்.