ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துபாயில் தொடங்குகிறது.
இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 31 ஆம் தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 19 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளார்கள்.
இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் குமார், 6 முறை உலக சாம்பியனான மூத்த வீராங்கனை மேரிகோம், சிம்ரன்ஜித் கவுர், நடப்பு சாம்பியன் பூஜா ராணி, லவ்லினா ஆகியோரும் அடங்குவர்.
இந்தப் போட்டி முதலில் டெல்லியில் நடக்க இருந்தது. கொரோனா பரவலால் துபாய்க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் தங்கப்பதக்கம் கைப்பற்றுவோருக்கு ரூ.7¼ லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்வோருக்கு ரூ.3½ லட்சமும், வெண்கலப்பதக்கம் பெறுவோருக்கு ரூ.1¾ லட்சமும் வழங்கப்படும். 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கம் வென்றது. இம்முறைஅதைவிட இந்தியா அதிக அளவில் பதக்கவேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் போட்டி நடைபெறுவதால் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.