எங்களுக்கு உரிய ஸ்பான்சர் கிடைத்தால் நாங்கள் இதை இனி செய்ய வேண்டியதில்லை என ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாடி வரும் ரியான் பர்ல் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது.
அதோடு பலரும் அவருக்கும், அவரது அணிக்கும் வேண்டும் நிதியுதவியை அளிக்க முன் வந்துள்ளனர். சிலர் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு மாடர்ன் டே கிரிக்கெட்டில் அளிக்கப்பட்டு வரும் நிதியுதவி குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அப்படி என்ன கேட்டார் ரியான்?
“எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என சொல்லி சர்வதேச கிரிக்கெட் சங்கத்தை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார் அவர்.
அண்மையில் பாகிஸ்தான் அணியுடன் ஜிம்பாப்வே அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தது.