மும்பையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமுடக்கம் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து சென்டர்களிலும் தடுப்பூசி போடப்படுவதில்லை. பதிவு செய்து மக்கள் பல நாள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் கூட தடுப்பூசி போடப்படும் சென்டருக்கு வந்து தடுப்பூசிபோட பல நாட்கள் அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதையடுத்து 75 வயதை கடந்தவர்கள், நடக்க முடியாத ஊனமுற்றவர்கள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி துருதி கபாடியா, குனால் திவாரி ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி திபன்கர் தத்தா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வரும் போது, `வீட்டிற்கு சென்று தடுப்பூசி போட முடியாது என்ற மத்திய அரசின் கொள்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?’ என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக்கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியதாகவும், அதில் நோயாளிகளை தடுப்பூசி போட ஸ்டெச்சரில் அழைத்து செல்வது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று குறிப்பிட்டார். உடனே கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிபுணர் குழுவில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. நாட்டில் அதிகமான கட்டடங்கள் இருக்கும் தெருக்கள் மிகவும் குறுகலாக இருக்கிறது. அங்கிருந்தெல்லாம் நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு வர முடியாது. நான் பிறந்து வளர்ந்த கொல்கத்தாவில் கூட குடியிருப்பு கட்டடங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அங்கெல்லாம் ஸ்டெச்சர் கொண்டு செல்ல முடியாது. அதிகமான முதியோர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு குறுகலான தெருக்களில் வசிக்கின்றனர் என்று தலைமை நீதிபதி திபன்கர் தெரிவித்தார்.
வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தடுப்பூசி பெற உரிமை இல்லை என்று நீங்கள்(மத்திய அரசு) சொல்கிறீர்களா?. அத்தகையவர்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வீர்கள் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மத்திய அரசு வீட்டில் சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை என்று தெரிகிறது. மும்பை மாநகராட்சி வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி போட தயாராக இருந்தால் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். நீங்கள் பணியை தொடங்குங்கள். வயதானவர்கள், ஊனமுற்றோர் மற்றும் படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி போட முடியுமா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.