மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர்.
பின்னர், ரயில் கண்டெய்னரிலிருந்த ஆக்சிஜன், ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு கண்டெய்னர் லாரிகளில், தலா 20 மெட்ரிக் டன் வீதம் நிரப்பப்பட்டது. அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேற்குவங்கத்தில் இருந்து வந்திருக்கும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட உள்ளதாகத் தெவித்தார். ஊரடங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தளர்வுகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.