“இமேஜ் பில்டப் செய்வதை விட மற்ற விஷயங்களும் வாழ்க்கையில் அதிகம் இருக்கிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது” என்று கொரோனா விவகாரத்தில் மத்திய அரசை பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட நடிகரான அனுபம் கெர் விமர்சித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் சிக்கலை தந்துள்ளது எனலாம். கொரோனா பரவலை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க பாஜக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட நடிகர் அனுபம் கெர் தற்போது இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியிருக்கிறார். “இரண்டாவது கொரோனா அலையை அடுத்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.
இமேஜ் பில்டப் செய்வதை விட மற்ற விஷயங்களும் வாழ்க்கையில் அதிகம் இருக்கிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. முக்கியமான இந்த சூழலில் மக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் அரசின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். அதையே முழு மூச்சாக கொண்டு அரசு செயல்பட வேண்டும். எங்கோ இந்த விஷயத்தில் அரசு கோட்டைவிட்டுவிட்டது. மக்கள் இன்று ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்கின்றனர்.
கங்கை போன்ற புண்ணிய நதிகளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதப்பது மிகப்பெரிய எச்சரிக்கை. எனவே கொரோனா நோய்க்கு மத்திய அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களை காப்பாற்றியே ஆக வேண்டும். மக்கள் தான் நம்மை ஓட்டுப் போட்டு நாட்டை ஆள தேர்ந்தெடுத்தவர்கள். மக்கள் சாவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால், பொதுமக்கள் கோபப்படவே செய்வார்கள். இனி அடுத்து ஒரு உயிரும் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல் ஆற்றுங்கள்” என்று கூறியிருக்கிறார்