கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” கொரோனா தொற்றால் பல குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். முதியவர்கள் தங்களை இதுவரை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை இழந்து ஆதரவின்றி நிற்கிறார்கள்.
அதுபோன்ற குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் ஆதரவாக மத்திய பிரதேச அரசு இருக்கும். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை அரசு கவனித்துக் கொள்ளும். அவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். மேலும், அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். சுயமாகத் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி பெற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும்” என்று சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.