இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.
ஒருநாள் தொடர் ஜூலை 13, 16, 19 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் 22, 24, 27 ஆகிய தேதிகளிலும் நடைபெறலாம் என தெரிகிறது. கோலி, ரோகித், பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா என அணியின் மிக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால் தவான், பிருத்வி ஷா, சூரியகுமார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்ணால், புவனேஷ்வர் குமார், சைனி, தீபக் சாஹர், சாஹல், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் மாதிரியான வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னதாக சொன்னதை போலவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி ‘பி’ டீமை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் யார்?
இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ள ஆக்டிங் கேப்டனாக தவான் செயல்படலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் கேப்டன் பரிசீலனையில் ஹர்திக் பாண்ட்யா பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கே.எல்.ராகுல் அதை செய்ய தவறினால் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் கூட அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது. இதில் ராகுலுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்படும்.
“அணியில் இடம்பிடிக்க உள்ள மூத்த மற்றும் அனுபவ வீரரான தவனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம். அவரது சகோதரர் குர்ணால் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான ஆல் ரவுண்டராக இருப்பார். தவானுடன் பிருத்வி ஷா தொடக்க வீரராக களம் காண வேண்டும்.
ஷ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் அணியின் பலம். தீபக் சாஹர், சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் என மூவரும் அணியின் முதல் நிலை பவுலர்கள். சைனி அணியில் இருப்பதும் சிறப்பாக இருக்கும். நடராஜான், ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி அணியில் இருப்பது பலம்” என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா.
ஐந்து புதுமுகங்கள்!
அதே போல இந்த தொடரில் தேவ்தத் படிக்கல், வருண் சக்கரவர்த்தி, ராகுல் தெவாட்டியா, ரவி பிஷோனி, ஹர்ஷல் பட்டேல் என சில இளம் வீரர்கள் அறிமுக வீரர்களாக இந்த தொடரில் களம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.