இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதுப் பெண் உயிரிழந்துள்ளார்.
காஸா எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இஸ்ரேலின் அஸ்கேலான் நகரில் வயதான பெண்மணி ஒருவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சவும்யா என்பவர் ஏற்றிருந்தார். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவும்யா உயிரிழந்ததை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சவும்யா இந்தியாவில் இருந்த தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக சவும்யா, அஸ்கேலான் நகரில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவரும் ஒன்பது வயது மகனும் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள மையம் ஒரு நிமிட பயண தூரத்தில் இருந்தும், அங்கு உடனடியாக செல்ல முடியாததால் தாக்குதலில் சிக்கி சவும்யா உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் IRON DOME அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இஸ்ரேல் பகுதியில் சிலர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.