புதிய பிரைவசி நெறிமுறைகளை பயனாளிகள் வரும் 15 ம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்திருந்த நிபந்தனையை வாட்ஸ்அப் தள்ளிவைத்துள்ளது. புதிய நெறிமுறைகளை ஏற்காவிட்டாலும், பயனாளிகள் கணக்கு டெலிட் செய்யப்படாது என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய அறிவிப்பு, பிரைவசி கொள்கையை ஏற்பதில் தயக்கம் கொண்டவர்களுக்கு ஆசுவாசம் அளிப்பதாக அமைந்தாலும், வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பான பிரச்னையோ, சர்ச்சையோ முடிவுக்கு வந்திருப்பதாக சொல்வதற்கில்லை.

ஏனெனில், வாட்ஸ்அப், சர்ச்சைக்குரிய தனது பிரைவசி கொள்கையை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதத்தை மட்டுமே மாற்றியிருக்கிறது. இந்த வில்லங்கத்தை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன்னர், வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்ததும், அதனால் பெரும் சர்ச்சை உண்டானதும் நினைவில் இருக்கலாம். பயனாளிகளின் தரவுகள் சேகரிக்கப்படும் விதம், அந்த தகவல்கள் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் அம்சம் உள்ளிட்ட பல விஷயங்களை கொண்டிருந்த இந்த பிரைவசி கொள்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்கவிட்டால் வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என கெடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

image

இதனால் வாட்ஸ்அப் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு, சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் சேவைகள் வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக பிரபலமாயின.

இந்த எதிர்ப்பு அலையை சமாளிக்கும் வகையில், வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கைக்கு விளக்கம் அளித்ததோடு, புதிய நிபந்தனைகளை ஏற்பதற்கான காலக்கெடுவை மே 15 ம் தேதி வரை நீட்டித்தது. இந்த கெடு நெருங்கிய நிலையில் வாட்ஸ்அப், புதிய நெறிமுறைகளை பயனாளிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, பிரைவசி நெறிமுறை கெடு தள்ளிவைக்கப்படுவதை உணர்த்தினாலும், நெறிமுறைகளை ஏற்க பயனாளிகளை மறைமுகமாக வாட்ஸ்அப் நிர்பந்திக்கிறது. அதாவதும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், வாட்ஸ்அப் சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாது எனும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புதிய நெறிமுறைகளை ஏற்காதவர்கள் கணக்கு டெலிட் செய்யப்படாது. அதற்கு மாறாக வாட்ஸ்அப் இத்தகைய பயனாளிகளுக்கு பிரைவசி நிபந்தனையை தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை இவ்வாறு பயனாளிகளுக்கு நினைவூட்டல் அளிக்கப்பட்ட பிறகு, இது நிரந்தர நினைவூட்டலாக மாற்றப்படும். அதன்பிறகு பயனாளிகள் வாட்ஸ்அப் சேவையை முழுவதும் பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் செய்திகளுக்கு பதில் அளிக்கலாம். மற்றபடி, வாட்ஸ்அப் சாட் வசதியை எல்லாம் அணுக முடியாது.

image

இப்படி செயலிழக்கும் கணக்குகள் 120 நாட்களுக்கு பிறகு நீக்கப்படும். இதனிடையே, வாட்ஸ்அப் புதிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அவை அமலுக்கு வரும். புதிய பயனாளிகளுக்கும் இது பொருந்தும். ஆக, வாட்ஸ்அப், சுற்றி வளைத்து பயனாளிகள் தனது சர்ச்சைக்குரிய பிரைவசி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வாட்ஸ்அப் வழி செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய நெறிமுறைகளுக்கு பயனாளிகள் மற்றும் பிரைவசி வல்லுநர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, இந்திய அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புதிய பிரைவசி நெறிமுறைகள் அமல் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விதவிதமான விளக்கங்களால் இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கையை எப்படியேனும் அமல் செய்வதில் தீவிரமாக இருப்பதை உணர்த்தியிருக்கிறது.

> இணைப்பு: வாட்ஸ்அப் புதிய அறிவிப்பு தொடர்பான வலைப்பதிவு

– சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.