தலமலை சாலையில் கரடி நடமாட்டம். வாகனங்களை கண்டு அஞ்சியபடி குடுகுடுவென ஓடிய கரடி இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், வன விலங்குகள் அவ்வப்போது பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்வதற்காக ஒரு காரில் மூன்று பேர் தலமலை வனச்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் நடுவே ஒரு கரடி நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையில் கார் வருவதை கண்ட கரடி அச்சமடைந்து சாலையில் சிறிது தூரம் குடுகுடுவென ஓட்டம் பிடித்தது. கரடி ஓடுவதை காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது சாலையில் சிறிது தூரம் ஓடிய கரடி வனப் பகுதியில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
தலமலை சாலையில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் செல்லுமாறும், ஹாரன் ஒலி எழுப்பாமல் இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.