சென்னை கிண்டியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மருத்துவர் உட்பட இரண்டு பேர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
நோய்த் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மருத்துவர் ராமசுந்தர், மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஊழியர் ஆகியோர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதற்காக, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 22 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே, தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அது கள்ளச்சந்தையில் விற்கப்படும் ஆபத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக இன்று காலை மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டிருந்தது. அதை திருடிய ஒப்பந்த ஊழியரை பிடித்து மதிச்சயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரெம்டெசிவிரை சார்ந்து நிகழ்ந்துவரும் இப்படியான தொடர் குற்றங்கள், மருத்துவ உலகில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.