கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியிருக்கிறது. மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, தனியாருக்கும் விற்றுக்கொள்ளலாம் என்றும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, சமீபத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தது வந்தது. இந்த விதிமுறை மே 1 முதலே அமல் என்றாலும், தற்போதே தடுப்பூசியின் தேவைகளும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியுள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்.

இங்குதான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள் ஏற்றுமதியை அமெரிக்க தடை செய்திருப்பதன் காரணமாக இந்திய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனாவால் உலகிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டது அமெரிக்காதான். இதனால் அங்கு தடுப்பூசிக்கான தேவையும் அதிகமாக இருந்தது. அதிகரித்து வந்த அதிக பாதிப்பு காரணமாக முதலில் உள்நாட்டு தேவையை கவனிக்கும் வகையில், போர்க்கால ராணுவ உற்பத்தி சட்டம் எனப்படும் Defence Production Act (DPA)-ஐ அமலுக்கு கொண்டுவந்தார் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப்.

தற்போதைய அதிபர் ஜோ பைடன், கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு அந்த தடையை நீட்டித்துள்ளார். இந்த சட்டத்தின் அம்சம், அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனங்கள் வர்த்தக இழப்பு ஏற்பட்டாலும் உள்நாட்டுக்காக மட்டுமே தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்பதே. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ சப்ளையர்களான ஃபைசர் – பயோஎன்டெக், மாடனா மற்றும் ஜான்சன் & ஜான்சனின் யூனிட் ஜான்சென் ஆகியவற்றின் தடுப்பூசி விற்பனையை அமெரிக்க சந்தையில் கட்டுப்படுத்த டிபிஏ பயன்படுத்தப்பட்டுள்ளது. பைசர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள்தான் உலகில் அதிகளவு தடுப்பூசிகளை தயாரித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

image

இதற்கிடையே, பைடன் அரசு நீட்டித்துள்ள இந்த முடிவு உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி தயாரிப்புகளை பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவும் அதில் இருந்து தப்பவில்லை. அமெரிக்காவின் இந்த தடை, கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான உடனடி உற்பத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) கூறினாலும், எதிர்கால நோக்கோடு தயாரிக்கப்படும் தேவையான அளவிலான உற்பத்தியை இந்த தடை குறைக்கும் என்கிறது சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாகம்.

இந்த நிறுவனம், தற்போது ஒரு மாதத்திற்கு 6 முதல் 7 கோடி டோஸ் வரையிலான கோவிஷீல்டு தடுப்பூசிகளை உருவாக்குகிறது. அடுத்த சில மாதங்களில் உற்பத்தியை மாதத்திற்கு 10 கோடி டோஸாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க பயோடெக் நிறுவனமான நோவோவாக்ஸுடன், இரண்டாவது தடுப்பூசியான கோவோவாக்ஸ் உற்பத்தியை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட். இதற்காக புனேவிலும், செக் குடியரசு நாட்டில் உள்ள ஆலையிலும் பணிகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அரசின் தடை நீக்கப்படமால் இருப்பது உற்பத்தியை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இந்திய கம்பெனிகளுக்கு பாதிப்பா?

அமெரிக்க அரசின் தடையால், இந்திய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் பல வழிகளில் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பல முக்கியமான, அடிப்படை பொருட்களான மருத்துவ பைகள், பில்டர்கள், மருந்துகள் அடைக்கும் குப்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போன்ற 30 முதல் 40 வரையிலான தயாரிப்பு பொருட்கள் அமெரிக்காவில் இருந்து மட்டுமே மூலப்பொருளாக கிடைக்கின்றன. இதுபோன்ற மருந்து உற்பத்திக்கான சில உதிரி பாகங்கள் ஆகியவற்றின் வர்த்தகம் அமெரிக்க முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள் இதுவரை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்தே மூலப்பொருட்களை வாங்கி வந்துள்ளனர். சப்ளையர்களை விரைவாக மாற்றுவது எளிதல்ல. மேலும், உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்கள் அதிகரித்து வரும் தேவையை எதிர்கொள்கின்றனர். இதனால் என்ன, நம் நாட்டில் மூலப்பொருட்களை தயாரிக்க முடியாதா என்கிறீர்களா.?

இதே வாதத்தை நிபுணர்கள் முன்னால் வைத்தால், `எந்தவொரு நாடும் அதன் அனைத்து மூலப்பொருட்களையும் உள்நாட்டில் மூலமாகப் பெறுவது சாத்தியமில்லை’ என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

image

ஒரு தடுப்பூசி தயாரிக்கும் செயல்முறை ஆயிரக்கணக்கான மூலப்பொருட்கள் மற்றும் உலைகளின் பயன்பாட்டை உள்ளடக்கியது. உற்பத்திச் சங்கிலி முழுவதும் பல அத்தியாவசிய பொருட்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பால் லைஃப் சயின்சஸ், பாக்ஸ்டர், மில்லிபோர், தெர்மோஃபிஷர், சைடிவா போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அந்த தயாரிப்புகளில் பல காப்புரிமை பாதுகாப்பைக் கொண்டுள்ளன. இதனால் அவற்றை மாற்றுவது எளிதல்ல.

உதாரணமாக, பாரத் பயோடெக் தயாரித்துள்ள தடுப்பூசி ஆல்ஜெல்-ஐஎம்டிஜி என்ற தனியுரிம வேதிப்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இது மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தியை செல்லுலார் மட்டத்தில் தூண்டுகிறது, மேலும் வைரஸ்களைக் கொல்ல அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த ரசாயனம், அமெரிக்க மாகாணமான கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள பாரத் பயோடெக், “எங்கள் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் நுகர்பொருட்களை ஏற்கெனவே பாதுகாத்து வைத்துள்ளதால், தற்போதைக்கு பிரச்னையில்லாமல் உற்பத்தியை ஆண்டுக்கு 70 கோடி டோஸ் அளவுகளாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். தற்போது, ஆண்டுக்கு 5 முதல் 6 கோடி டோஸ் தயாரிக்க முடியும்” என்று கூறியுள்ள அந்நிறுவனம், எனினும் தொடர்ந்து மூலப்பொருட்கள் தடைபட்டால் உற்பத்தி குறையும் என்று கூறியிருக்கிறது.

இந்தியாவின் தேவையை மட்டுமல்ல, இந்த தடை தடுப்பூசி ஏற்றுமதியையும் பாதிக்கும். ஐ.நா சுகாதார அமைப்பு மற்றும் பிற நாடுகளுக்கு 2021 ஆம் ஆண்டில் மட்டும், 20 கோடி அளவு தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் வழங்க வேண்டி இருக்கிறது. இதேபோல், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களை பெற்றுள்ளது. மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், ஈரான், பராகுவே, குவாத்தமாலா, நிகரகுவா, கயானா, வெனிசுலா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே மற்றும் பல நாடுகளில் இருந்து ஆர்டர்களை அந்நிறுவனம் வாங்கி வைத்துள்ளது. இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ளன.

image

இதையடுத்தே, கடந்த 16-ம் தேதி சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, “அமெரிக்காவிற்கு வெளியே உள்ள தடுப்பூசி தொழில் சார்பாக, அமெரிக்காவிலிருந்து மூலப்பொருள் ஏற்றுமதியின் தடையை நீக்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால் தடுப்பூசி உற்பத்தியை (வேறு இடங்களில்) அதிகரிக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை டேக் செய்து ட்வீட் பதிவிட்டுருந்தார்.

இதேபோல், ஏப்ரல் 19-ம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் பேசியதாக ட்வீட் செய்திருந்தார். இதேபோல், அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சாந்து தடையை நீக்க கோரி தொடர்ந்து ஜோ பைடன் நிர்வாகத்துடன் பேசி வருகிறார்.

இதற்கு, “இந்தியாவின் தேவை எங்களுக்கு புரிகிறது. இந்தியாவின் தேவையை நிறைவேற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் சரியான முடிவு எடுக்கப்படும்” என்று மட்டும் கூறியிருக்கும் அமெரிக்கா, மருத்துவ மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான தனது தடையை நீக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்புக்கொண்டு பேசினால் எதுவும் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி, இந்த விவகாரம் தற்போதைக்கு இந்தியாவிற்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் ஒரு முக்கியமான பிரச்னையாகவே இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

– உறுதுணை செய்திக் கட்டுரை: India Today

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.