காதல் திருமணம் செய்து கொண்ட தங்களை, ஆணவ படுகொலை செய்யும் வாய்ப்பிருப்பதால், காவல்துறை பாதுகாப்புகோரி இளம்பெண் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து மனுதாரரின் சித்தப்பா மற்றும் கணவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
“நானும் சுரேந்தர் என்பவரும் காதலித்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி எனது வீட்டிலிருந்து, யாருக்கும் தெரியாமல் எனது காதலர் சுரேந்தர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஏப்ரல் 11ஆம் தேதி எனது காதலர் சுரேந்தரை அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். நான் எனது வீட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லவில்லை.

image

எனது கணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், என்பதால் எனது குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டதால், எனது குடும்பத்தினர் எங்களை ஆணவப் படுகொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக என்னையும், எனது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் வெளிஆட்கள் மூலமாக கண்காணித்து வருகின்றனர். எனவே எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனக்கும், எனது கணவருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்”. மேலும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு சிறப்பு குழு அமைத்து உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனுதாரரின் சித்தப்பா மற்றும் கணவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.