கொடைக்கானலுக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் வரை, கடைகளை அடைத்து கஞ்சித்தொட்டி அமைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக சுற்றுலா சார் அனைத்து தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்பட சுற்றுலா தலங்களுக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி சுற்றுலா சார் அனைத்து சங்கங்கள் சார்பாக 1000-க்கும் மேற்பட்டவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

இதையடுத்து அவர்களிடம் அரசு தரப்பில் பேசப்பட்டு 24 மணி நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அரசு உறுதியளித்த 24 மணி நேரம் கடந்தும் அரசுதரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், ஏப்ரல் 22ஆம் தேதி முதல், அனைத்து கடைகளையும் அடைத்து, பொது மக்கள் உணவுக்காக கஞ்சி தொட்டி அமைத்து முதல் கட்டமாக போராட்டத்தை நடத்த உள்ளனர்.

அதற்கும் அரசு அமைதி காத்தால், மனித சங்கிலி போராட்டம், தர்ணா போராட்டம் என பல்வேறு வடிவிலான போராட்டங்களை, தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலா சார் தொழிற்சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். மேலும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல மட்டுமே தடை என்ற ஆணை உள்ளதாகவும், கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு வர தடை இல்லை என்ற நிலையை மாவட்ட ஆட்சியர் தெளிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.