காவல்துறை உங்கள் நண்பன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நிஜத்தில் அதை உண்மையாக்கி நெகிழ வைத்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் அமைந்துள்ள பஸ்டார் பிரிவில் டிஎஸ்பியாக இருப்பவர் ஷில்பா சாகு. இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம்.

டி.எஸ்.பி ஷில்பா சாகு

இதைப் பற்றி பயப்படாமல், சுடும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் இவர் நடுவீதியில் நின்று பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விதிகளைப் பற்றி எடுத்துக் கூறி தனது காவல் பணியை மேற்கொண்டு வருகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், ஷில்பா இப்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான்.

தெருவில் நடமாடுகிறவர்களிடம் முகக்கவசம் அணிந்தபடி, கைகளில் லத்தியோடு நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்றி நடக்கிறார்களா என்று கண்காணிக்கும் அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா கொரோனா தாக்குதலின் இரண்டாம் அலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தக் காணொளி அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷில்பாவை போல எத்தனையோ முன்களப் பணியாளர்கள் தங்கள் நலனைக்கூடப் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காகப் போராடுகின்றனர். “கர்ப்பமான நிலையிலும் நான் வெளியே வந்தால்தான், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை கவனிக்க முடியும்…” என்று கேட்கிறார் ஷில்பா. இரண்டு உயிர்களைப் பணயம் வைத்து விழிப்புணர்வு வேலைகளில் இறங்கியிருக்கும் இவரை பார்த்த பிறகாவது மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் சரி.

– லதா ரகுநாதன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.