இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களில், மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், ஒரு படுக்கையில் மூன்று நோயாளிகள் வரையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ஐநாக்ஸ் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாது. இந்த முடிவு குறித்து தமிழக அரசிடம் எந்த கலந்தாலோசனையும் மத்திய அரசு செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குகிறது. அதே வேளையில் ஆந்திரா, தெலங்கானாவிற்கு 360 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கிவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்தாண்டு கொரோனா உச்சத்திலிருந்த காலத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதினால் தற்போதைய தேவையை விட இருமடங்கு ஆக்சிஜன் தேவை ஏற்படும் நிலை உருவாகும். அதாவது கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 240 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு தமிழகத்தில் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்க முடியும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்திற்குக் குறைந்த அளவு ஆக்சிஜன் வழங்கி வரும் சூழலில், இங்குத் தயாரிக்கப்படும் ஆக்சிஜனையும் பிற மாநிலங்களுக்கு வழங்கினால் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர், “மற்ற மாநிலங்களுக்குத் தேவை ஏற்படும்போது, இங்கிருந்து கொடுப்பது வழக்கம் தான். தற்போது நமக்குத் தேவையான ரெம்டெசிவிர் மற்ற மாநிலங்களிலிருந்து நமக்கு மாற்றி விடப்படுகிறது” என்று கூறினார்.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 21-ம் தேதி 4,880 டன், ஏப்ரல் 25-ம் 5,619 டன் மற்றும் ஏப்ரல் 30-ம் 6,593 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வரவுள்ளது என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே நாளொன்றுக்கு 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனாவின் முதல் அலையின் போதே பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.