“மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மற்றொரு புறம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உடனே நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும்” என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், “நாட்டின் பல தலைவர்களுடன் கொரோனா பரவல் குறித்து விவாதித்தேன். நாடு போர் போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது.

சஞ்சய் ராவுத்

எனவே கொரோனா பரவல் குறித்து விவாதிக்க உடனே நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும். கொரோனா குறித்து மத்திய அரசுடன் விவாதித்து ஆதரவு பெறவேண்டிய நிலையில் மாநிலங்கள் இருக்கின்றன. ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில மாநிலங்கள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டின. ஆனால் இப்போது சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆக்சிஜன், படுக்கை, அத்தியாவசிய மருந்துகள் போன்ற உதவிகள் கேட்டு தங்களுக்கு போனில் அழைத்துகொண்டே இருப்பதாக அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிணவறைகள் நிரம்பி இருக்கிறது. எனவே நாடாளுமன்றத்தின் இரண்டு நாள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதன் மூலம் கொரோனாவை தடுப்பது குறித்தும், மத்திய அரசிடம் உதவி கேட்கவும் வசதியாக இருக்கும்.

கொரோனா தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் அரசியல் செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

சிவசேனா பத்திரிகையான சாம்னாவிலும் இது தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. `கொரோனாவை கையாளும் விவகாரத்தில் மாநில அரசு கவிழ வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களின் உயிரை காப்பதிலாவது அரசும் எதிர்க்கட்சியும் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் செயல்படவேண்டும். கொரோனா மருந்து விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கொரோனா மருந்தை பதுக்கிய பா.ஜ.க?

இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக குஜராத் அருகில் உள்ள தாமனை சேர்ந்த மருந்து கம்பெனி இயக்குநர் ராஜேஷ் என்பவரை மும்பை போலீஸார் ஞயிற்றுக்கிழமை இரவு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதம் செய்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

ராஜேஷ்மருந்துக் கம்பெனியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை பா.ஜ.க விலைக்கு வாங்கியுள்ளது. அதனை மகாராஷ்டிரா அரசுக்காகத்தான் வாங்கினோம் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் உயிர்காக்கும் மருந்தை வாங்க எந்த வித அனுமதியும் பா.ஜ.க பெறவில்லை. மொத்தம் 60 ஆயிரம் டோஸ் மருந்தை பா.ஜ.க வாங்கி பதுக்கி வைத்து இருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த மருந்தை மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சகத்தில் கொடுக்க இருந்தோம் என்றும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசினோம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.

இம்மருந்து பதுக்கல் தொடர்பாக எந்த வித விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மருந்தை பதுக்கி வைத்த செயலை காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜ.க தலைவர் பட்னாவிஸின் இந்த செயல் மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்று குறிப்பிட்டதோடு பட்னாவிஸ் போலீஸ் நிலையம் சென்று போலீஸாருடன் வாதிட்ட வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் கூறுகையில், `பட்னாவிஸ் போலீஸாருக்கு நெருக்கடி கொடுக்க முயன்றுள்ளார். அதோடு போலீஸாரின் செயல்பாட்டில் தலையிட முயன்றுள்ளார். மருந்து பதுக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்தை பதுக்கிவைத்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க செயல்பட்டதாக கூறப்படுகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.