“அ.தி.மு.க அரசு அமைந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்தால், தி.மு.க தலைவரால் சுயமாக எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது. ஏனெனில் ,அவர் குடும்ப கட்டுப்பாட்டில் இயங்குகிறார். தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வர முடியாது. அப்படியே வந்தாலும் அவரால் எந்த பயனும் இல்லை” என்று முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read: செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் முகமூடி; `நல்லது பண்ணுங்க’- சுயேச்சை வேட்பாளரின் நூதன பிரசாரம்
முன்னாள் அமைச்சரான கரூர் சின்னசாமி, கடந்த 1999 – ம் ஆண்டு கரூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட செயலாளராக இருந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கவில் இணைந்தார். தி.மு.கவின் விவசாய அணி செயலாளராக பதவி வகித்து வந்த இவர், கடந்த தேர்தலில் சீட் கிடைக்காத கோபத்தில், அ.தி.மு.கவுக்கு தாவினார். இதனால், தேர்தல் பிரசாரத்தில், கரூர் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்தும், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை எதிர்த்தும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கரூர் சின்னசாமி,
“நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். என்னுடைய கணிப்புப்படி 120 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றும். ‘தமிழகத்தில் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்’ என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், கருத்துக் கணிப்புகளை நம்பமுடியாது. ஒவ்வொருவரின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மக்களின் மனநிலையை படித்து பார்க்கையில், மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க வேண்டும் என வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக, தாய்மார்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஏனெனில், அவர் ஒரு சாதாரணமான விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். கோடிக்கணக்கானவர்களின் ஆசிப்பெற்று, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எளிதில் அணுகக்கூடிய முதல்வர் பழனிசாமி.
அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு ஆறு இலவச கேஸ் சிலிண்டர்கள், அனைத்து ரேஷன் அட்டை உள்ள குடும்ப தலைவர்களுக்கும் வாஷிங் மெஷின், பெண்களுக்கு பேருந்தில் பயணிக்க 50 சதவீத கட்டண சலுகை, கேபிள் கட்டணம் இலவசம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், விவசாய கடன்கள் தள்ளுபடி போன்ற திட்டங்களால், ‘அ.தி.மு.க அரசு மீண்டும் அமைய வேண்டும்’ என்று நினைத்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க அரசு அமைந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்தால், தி.மு.க தலைவரால் சுயமாக எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது ஏனெனில் அவர் அவர் குடும்ப கட்டுப்பாட்டில் இயங்குகிறார். தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வர முடியாது அப்படி வந்தாலும், அவரால் எந்த பயனும் இல்லை. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.கவில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், அடித்தட்டு மக்களுளின் நலனுக்காக ஆட்சி அ.தி.மு.க ஆட்சி” என்று கூறினார்.