சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவ்வன் கப்பல் நகரத் தொடங்கியது.
மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு எவர் கிவன் என்ற ஜப்பான் நாட்டு சரக்கு கப்பல் 20 ஆயிரம் பெட்டகங்களுடன் சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் கடந்த 23 ஆம் தேதி எகிப்தை ஒட்டியுள்ள சூயஸ் கால்வாயை கடக்கும் போது குறுக்காக திரும்பி மேற்கொண்டு செல்ல இயலாமல் சிக்கிக் கொண்டது. இதனால் ஆசிய – மேற்கத்திய நாடுகள் இடையே சரக்குப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கப்பலை மீட்கும் முயற்சிகள் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக நடந்தன.
கப்பலின் அடிப்பகுதியில் உள்ள மணல் பகுதியை தோண்டி அதை வெளியே இழுப்பதற்காக இழுவை படகுகள் வரவழைக்கப்பட்டன. ஏற்கெனவே 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டிருந்த நிலையில், அந்த முயற்சி வெற்றிபெறாவிட்டால் கப்பலுக்கு உள்ளே உள்ள சரக்குகளை வெளியில் எடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கப்பலை மீட்கும் பணி எவ்வளவு நாளாகும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிய எவர் க்ரீன் நிறுவனத்தின் எவர் கிவ்வன் என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு நகரத் தொடங்கியதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தித்துள்ளது. கப்பலை மீட்பதற்காக ஒருவாரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தநிலையில், சூயஸ் கால்வாயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.