பஞ்சாப்பில் பாஜக எம்.எல்.ஏ.வின் சட்டையை கிழித்து விவசாய அமைப்பினர் சரமாரியாக தாக்கிய சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களால் பஞ்சாப் மாநிலத்தில் மத்திய பாஜக அரசு மீது கடும் எதிர்ப்பலை வீசுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அபோஹார் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான அருண் நாரங் மாலவுட்டில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொள்வதற்காக உள்ளூர் தலைவர்களுடன் மாலவுட்டுக்கு வந்த அருண் நாரங்கை திரும்பிச்செல்லக் கோரி அங்கிருந்த விவசாய அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். ஆனால் எதிர்ப்பை மீறி காரில் இருந்து இறங்கிய அருண் நாரங்கை, விவசாய அமைப்பினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
அவரது சட்டையை கிழித்து, மை வீசி தாக்கினர். இதனால் நிலைகுலைந்து போன அருண் நாரங் மீண்டும் காரை நோக்கி வேகமாக சென்றார். ஆனால் அவரை விடாமல் துரத்திய விவசாய அமைப்பினர் தாக்குவதற்கு முயற்சித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீசார் அருண் நாரங்கை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். எம்.எல்.ஏ. அருண் நாரங்கை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Punjab BJP MLA thrashed and beaten by Punjabi farmers in malot pic.twitter.com/OQfwIq4vAq
— JasveerSingh Muktsar (@jasveermuktsar) March 27, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM