மதுரை மாவட்டத்தில் 2 தொகுதிகளை பெற்றுவிட பா.ஜ.க தீவிரமாக போராடி வரும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமி ஆதரவாளர்களும் லாபி செய்து தங்களுக்கு சீட் வேண்டும் என்று குரல் எழுப்பி வருவது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கி வருகிறது.

சுப்பிரமணியசுவாமி

கடந்த சில வருடங்களாக ‘கிழக்கு எங்கள் இலக்கு’ என்று மதுரை கிழக்கு தொகுதியை பா.ஜ.க மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவசனும், தெற்கு தொகுதியை மாநில துணைத்தலைவர் மகாலட்சிமியும் எதிர்பார்த்து களப்பணி செய்து வந்தார்கள்.

ஆனால், மதுரை மாவட்ட அ.திமு.க-வோ எந்த தொகுதியையும் கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது என்று தலைமையை நிர்ப்பந்தித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பா.ஜ.க உத்தேசத் தொகுதிப் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியையும் குறிப்பிடாதது பா.ஜ.க நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

சி.டி.ரவி

மதுரை வந்திருந்த மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவியிடம் முறையிட்டார்கள். அவரோ, கவலைப்பட வேண்டாம். மதுரையில் ஒரு தொகுதி நமக்கு நிச்சயம் உண்டு என்று ஆறுதல் சொல்லிவிட்டு செல்ல, அந்த ஒரு தொகுதியை கைப்பற்றுவதில் பா.ஜ.க நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி நடந்து வருகிறது.

மதுரை மத்திய தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்குவார்கள் என்று தகவல் வந்ததையடுத்து மதுரையிலுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகிகள் தங்களுக்கு சீட் கேட்பதை விட, தங்களுக்கு பிடிக்காதவருக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளடி வேலைகளை செய்து வருவதாக கட்சியினர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தன்னுடைய ஆதரவாளர் சசிக்குமாருக்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று தேசியத்தலைவர் நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக வரும் செய்தி மதுரை பா.ஜ.க-வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சுப்ரமணியன் சுவாமியுடன் சசிக்குமார்

இது உண்மையா என்று பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வரும் ‘விராட் இந்துஸ்தான் சங்’ அமைப்பின் மாவட்ட தலைவருமான சசிக்குமாரிடம் கேட்டோம் “மதுரை எம்.பி-யாக வெற்றி பெற்ற டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கென்று மதுரை மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அம்மா சந்திரலேகா மதுரை கலெக்டராக இருந்தபோது மக்கள் நலத்திட்டங்கள் பல கொண்டு வந்ததால் அவர்களுக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்கள் கைகாட்டும் எனக்கு மக்கள் அமோக ஆதரவளிப்பார்கள். பா.ஜ.க-வில் எல்லோரும் சீட் கேட்கும்போது, மூன்று தேர்தல்களில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு, இப்போது வரை கட்சிப் பணியாற்றி வருகின்ற நானும் கேட்டுள்ளேன். எனக்காக சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைப்பார். மூத்த தலைவரின் தேர்வை கட்சித் தலைமை பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரை பா.ஜ.க-வுக்குள் இதுபோன்ற சம்பவங்கள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும் என்கிறார்கள் கட்சியினர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.