மகாராஷ்டிராவில் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரதோட், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான பூஜா சவான், டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர் கடந்த எட்டாம் தேதி, பூனே நகரில் கட்டடத்தின் மீதிருந்து விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மகாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரதோட்டுக்கு தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டி, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மகளிர் அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்த சஞ்சய் ரதோட் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது நற்பெயருக்கும் 30 ஆண்டு பொதுவாழ்வுக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டினார். இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சியினர் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக விமர்சித்தார். இந்நிலையில், சஞ்சய் ரதோட் பதவிவிலகியது மட்டும் போதாது என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.