மதுரையில் ஆட்டுமந்தைகளில் ஆட்டின் எடை கூடுதலுக்காக அதிகளவு தண்ணீரை ஊற்றி விற்பனை செய்யும் மோசடி செயலால் ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக கூறி உயிரிழந்த ஆடுகளுடன் வந்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார் இளைஞர் ஒருவர். உயிருக்கு போராடிய ஒரு ஆட்டின் பரிதாப நிலையால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் அரசு ஒப்பந்தத்துடன் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆட்டு வியாபாரிகள் சிலர் ஆட்டு குட்டிகள் மற்றும் ஆடுகளை அதிகளவிற்கு எடை கூடுதலாக காட்டி மோசடியாக விற்பனை செய்வதற்காக ஆடுகளுக்கு பம்ப் மூலமாக வயிறு முழுக்க தண்ணீரை நிரப்பி விவசாயிகளிடமும், பொதுமக்களிடம் விற்பனை செய்து வருவதாகவும், இதனால் விற்பனை செய்யப்படும் ஆடுகள் உயிரிழப்பதாக கூறி மதுரை மாவட்டம், சாமநத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் உயிரிழந்த ஆடுகளுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆட்டு சந்தைகளில் அதிக லாப விற்பனைக்காக ஆடுகளுக்கு தண்ணீரை வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாக செலுத்துவதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஆடுகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாகவும், தான் வாங்கிய 8 ஆடுகள் உயிரிழந்ததாகவும் கூறி உயிருக்கு போராடிய நிலையில் ஆடு ஒன்றை ஆட்சியர் அலுவலகம் முன்பாக துடிதுடிக்க போட்டுவிட்டு தனது வேதனையை இளைஞர் ஜெயராமன் வெளிப்படுத்தினார்.
கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சை அளிக்கப்பட்டாலும் ஆடுகளின் உயிரை மீட்பது சிரமம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் தான் பணம் கொடுத்து வாங்கிய ஆடுகள், வியாபாரிகள் ஆசையால் பரிதாபமாக உயிரிழப்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஆடுகளை துடிதுடிக்க உயிர்போகும் சூழலில் இளைஞர் ஜெயராமன் கொண்டுவந்து முறையிட்டது காண்போரை கண்கலங்க செய்தது.
கால்நடைத்துறையினர் ஆட்டு சந்தைகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மோசடி வியாபாரிகளால் ஆடுகள் உயிரிழப்பதோடு விவசாயிகளும் நஷ்டம் அடைய கூடிய நிலை உருவாகுவதாக தெரிவித்தார் அவர்.
தீடீரென இறக்கும் தருவாயில் இருந்த ஆடு மற்றும் இறந்த ஆட்டுக்குட்டியோடு ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கக்கோரி அறிவுறுத்தினர்.