கோவில்பட்டி அருகே கொல்லக்கிணறு கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, மருத்துவரின் தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததாக கூறி குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லக்கிணறு கிராமத்தினை சேர்ந்த மாடசாமி – வெயிலாட்சி தம்பதியின் 2வது மகன் மகிலரசன் ( ஒன்றை வயது). கடந்த 27ந்தேதி மகிலரசன் காய்ச்சல் காரணமாக கயத்தாரில் உள்ள தனியார் க்ளீனிக் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் கடந்த 28ந்தேதி அதிகாலையில் மகிலரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையெடுத்து மகிலரசன் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்று ஊரில் சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த காரணத்தினால் மகிலரசன் உயிரிழந்ததாக கூறி மகிலரசன் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இன்று தனியார் மருத்துவமனையை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். புகார் அளித்தால் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் கயத்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.